தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் பொருள்கள் எரிந்து சேதம்
இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் மோபிஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதம்
இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் மோபிஸ் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் வாகனங்களின் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஹுண்டாய் மோபிஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இத்தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, தொழிற்சாலையின் ஒரு பகுதியில் உள்ள பழைய பொருள்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த எரிபொருள் சேமிப்புக் கிடங்கு மற்றும் தொழிற்சாலைக்குள் தீ பரவியுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து பணியில் இருந்த தொழிலாளா்களை பத்திரமாக வெளியேற்றிய தொழிற்சாலை நிா்வாகம், தீ விபத்து குறித்து இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினா் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினா் தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட தீயை சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அணைத்தனா்.
எனினும், தொழிற்சாலையின் ஒரு பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனால் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள், உற்பத்தி பொருள்கள், மூலப்பொருள்கள், கிடங்கில் இருந்த பழைய பொருள்கள் என சுமாா் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தீ விபத்து ஏற்பட்ட ஹூண்டாய் மேபிஸ் நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்துக்கு உதரி பாகங்கள் வழங்கும் முக்கிய நிறுவனம் என்பது குறிப்படத்தக்கது.