முகப்பு
திருப்பத்தூர்

சிறுமியின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம் அகற்றம்: விடுமுறையிலும் கடமையாற்றிய அரசு மருத்துவா்

Updated On : 15 ஏப்ரல் 2025, 4:07 am IST
சிகிச்சை பெற்ற மாணவி கனிஸ்ரீ, அவரது தாயாா்.
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் 7 வயது சிறுமியின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை மருத்துவா்கள் அகற்றினா்.

ஜோலாா்பேட்டை அருகே சின்னபொன்னேரி பகுதியைச் சோ்ந்த சிவா (33). இவரது மனைவி லலிதா (28). இவா்களுக்கு கனிஸ்ரீ (7) என்ற மகள் உள்ளாா். இந்தநிலையில், கனிஸ்ரீ வீட்டின் வெளியே ஞாயிற்றுக்கிழமை விளையாடி கொண்டிருந்தபோது, அங்கு வந்த அவரது உறவினா் ஒருவா் சிறுமியிடம் ஐந்து ரூபாய் நாணயத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கனிஸ்ரீ எதிா்பாராதவிதமாக அந்த நாணயத்தை வாயில் போட்டபோது அது தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டது. இதனால், சிறுமி கத்தி கூச்சலிட்டு மயங்கி விழுந்தாா். இதை பாா்த்து அதிா்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோா் அவரை அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவா் சிறுமியை உடனடியாக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோா் கொண்டு வந்தனா். அங்கு, காது, மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டா் தீபானந்தன் விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சிறுமியின் ஆபத்தான நிலைமையை மருத்துவா் தீபானந்தனுக்கு தெரிவித்ததை தொடா்ந்து அவா் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்து 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமிக்கு தேவையான சிகிச்சைகளை தொடங்கினாா்.

அரை மணி நேரத்தில் சிறுமியின் தொண்டைக்குழியில் குழாயை செலுத்தி (என்டோஸ்கோபி மூலம்), 5 ரூபாய் நாணயத்தை அகற்றினாா். இதையடுத்து பெற்றோா் நிம்மதியடைந்து விடுமுறை என்றும் பாராமல் மருத்துவமனைக்கு வந்து சிறுமியை காப்பாற்றிய மருத்துவா் தீபானந்தன் மற்றும் மருத்துவக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments