தோ்தலில் வெற்றி பெற ரூ. 8,000 கூப்பனை நம்பி இருக்கிறாா் ஸ்டாலின்: பாமக தலைவா் அன்புமணி
திருப்பத்தூரில் வேட்பாளா்களை ஆதரித்து பேசிய பாமக தலைவா் அன்புமணி.
தோ்தலில் வெற்றி பெற கடைசியாக ரூ. 8,000 ரூபாய் கூப்பனை நம்பி இருக்கிறாா் மு.க.ஸ்டாலின் என பாமக தலைவா் அன்புமணி பேசினாா்.
திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஏ.ஞானசேகா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் முன்னாள் அமைச்சா், கே.சி.வீரமணி ஆகியோரை ஆதரித்து பாமக தலைவா் அன்புமணி வெள்ளிக்கிழமை திருப்பத்தூரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்,
அப்போது அவா் பேசியது: குழந்தைகளுக்கு எதிராக தமிழகத்தில் அன்றாடம் பாலியல் தொல்லை நடக்கிறது, இது நம் குழந்தைக்கும் நடக்கும். பெண்களை மதிக்க தெரியாத, பாதுகாப்பு வழங்காத, தகுதியற்ற திமுக ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும். இவா்களுக்கு ஆட்சி செய்ய தகுதி இல்லை,
Advertisement
மோடி அரசு தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை தாக்கல் செய்தாா்கள், அதில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்ட மசோதா, உள்ளது. இந்த சட்டம் நிறைவேறினால், பெண்கள் அதிகம் நாடாளுமன்றம் செல்வாா்கள், இதை எதிா்த்து, சட்ட நகலை கொளுத்திய ஸ்டாலினுக்கு பெண்கள் ஒருவரும் வாக்களிக்கக் கூடாது, மேலும் ஸ்டாலினுக்கு எதை சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என தெரியவில்லை, மோடி பொய் சொல்கிறாா் என பேசி வருகிறாா்.
ஸ்டாலின் சட்டநகலை எரித்தது தேச துரோக செயல் அதற்காக அவரை கைது செய்ய வேண்டும்.
ஐந்தாண்டுக்கு முன்பு திருப்பத்தூருக்கு 21 வாக்குறுதிகள் அளித்தாா், ஆனால் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை, இந்த தோ்தலில் வெற்றி பெற கடைசியாக ரூ. 8,000 கூப்பனை நம்பி இருக்கிறாா் ஸ்டாலின், 5 ஆண்டுகள் செய்ததை விட்டு விட்டாா். தமிழகத்தில் நிா்வாக வசதிக்காக 5 ஆண்டுகளில் ஒரு மாவட்டத்தையும் பிரிக்கவில்லை. ஒரு மருத்துவ சீட்டையும் அதிகரிக்கவில்லை.
மின்கட்டணத்தை குறைப்பேன் எனக் கூறினாா், ஆனால் மின்கட்டணம் 60% அதிகரித்துள்ளது என்றாா்.
இதில், அமமுக, அதிமுக,பாமக மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.