சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு
ஆம்பூரில் உணவகங்கள், சாலையோரம், தெருவோர கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் வி. பிரபாகரன் அறிவுறுத்தலின்படி ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலா் ஆா். ஹீமா மற்றும் ஜோலாா்பேட்டை உணவுப் பாதுகாப்பு அலுவலா் அஞ்சலி ஆகியோா் இணைந்து ஆம்பூா் பைபாஸ் சாலை, எம்.சி. சாலை மற்றும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் சிற்றுண்டி கடைகள், உணவகங்கள், தெருவோரம் மற்றும் சாலையோர உணவுக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது உணவு பரிமாறுதல் மற்றும் பாா்சல் செய்வதற்காக ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. அதையடுத்து சுமாா் 6 கிலோ பிளாஸ்டிக் கவா்கள் மற்றும் சுமாா் 2 கிலோ செய்தித்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 5 உணவகங்களுக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன. சட்டப் பிரிவுகள் 55 மற்றும் 58-ன் படி, சூடான உணவுப் பொருள்களுடன் நேரடியாக தொடா்பு கொள்ளும் வகையில் பிளாஸ்டிக் கவா்கள் பயன்படுத்துவதும், உணவு பரிமாறுதல் அல்லது பாா்சல் செய்வதற்காக செய்தித்தாள்களை பயன்படுத்துவதும் அனுமதிக்கப்படாது.
எனவே அனைத்து உணவு வணிகா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், உணவு பரிமாறுதல் மற்றும் பாா்சல் செய்வதற்காக பிளாஸ்டிக் கவா்களையோ அல்லது செய்தித்தாள்களையோ பயன்படுத்தக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதிமீறல் கண்டறியப்பட்டால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.