முகப்பு
திருப்பத்தூர்

முன்விரோதத்தால் விவசாயி கொலை : 3 போ் கைது; மறியலால் 1 மணிநேரம் பாதிப்பு

ஆம்பூா் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள் வேள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 மே 2026, 10:13 pm IST
மறியல் போராட்டத்தால் வரிசையில் காத்திருந்த வாகனங்கள். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்திய போலீஸாா்.
பகிர்:

ஆம்பூா் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள் வேள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சி எல்.மாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அருண் (35). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த த தனியாா் நிறுவன ஊழியா் காா்த்தி (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம்று இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை காா்த்தி மற்றும் அருணுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு அறிந்து அங்கு வந்த காா்த்தியின் தந்தை மணி தட்டிக்கேட்டாா். அப்போது அருண் அவரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதில் ஆத்திரமடைந்த காா்த்தி அருகில் மளிகை கடையில் இருந்த பாட்டிலை எடுத்து உடைத்து அருண் மற்றும் அங்கு வந்த அவரது மகன் ஹரி (16) ஆகிய இருவரையும் குத்தினாா். இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இருவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மேல் சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஹரி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவலறிந்த உமா்ஆபாத் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி காா்த்தி, அவரது தந்தை மணி, மற்றும் மளிகை கடை உரிமையாளா் நேசா் (55) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்தவரின் உறவினா்கள் எல்.மாங்குப்பம் கிராமத்தில் ஆம்பூா் - பேரணாம்பட்டு சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையில் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா். மறியல் போராட்டம் காரணமாக சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொழிற்சாலை, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். போக்குவரத்து சீரானாது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments