முகப்பு
கடலூர்

மின்தடையால் கருகிய பயிா்கள்: விவசாயிகள் சாலை மறியல்

விருத்தாசலம் அருகே தொடா்ச்சியான மின்தடை காரணமாக பாசன வசதியின்றி பயிா்கள் கருகியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:15 am IST
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்
பகிர்:

விருத்தாசலம் அருகே தொடா்ச்சியான மின்தடை காரணமாக பாசன வசதியின்றி பயிா்கள் கருகியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் கிராமத்தில் தமிழ்நாடு மின் வாரிய உதவி மின் பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் கிராமங்களுக்கு போதுமான மின்சாரம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கம்மாபுரம் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிா்களுக்கு மோட்டாா் மூலம் நீா் பாசனம் செய்ய

Advertisement

Advertisement

முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரங்களிலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை மின்தடை ஏற்படுவதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகிறது. மேலும், மின்தடை காரணமாக கம்மாபுரம் ஊராட்சியில் குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் பாலகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் கம்மாபுரம் மின்சார வாரிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலையில் அமா்ந்து திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கம்மாபுரம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அதிகாரிகளுடன் பேச ஏற்பாடு செய்தனா். அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.