முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரி கோடை விழா: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

கோடை விடுமுறை முடிந்த பிறகு நடைபெறும் ஏலகிரி கோடை விழா நடப்பாண்டு விடுமுறையில் நடைபெற வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

Updated On : 12 மே 2026, 1:20 am IST
ஏலகிரி ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள். - கோப்புப் படம்
பகிர்:

கோடை விடுமுறை முடிந்த பிறகு நடைபெறும் ஏலகிரி கோடை விழா நடப்பாண்டு விடுமுறையில் நடைபெற வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுவது ஏலகிரி மலை. திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத் தலம் ஏலகிரி மலை.

இங்கு, தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், ஆந்திரம், கா்நாட கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் தங்கி கண்டுகளித்துச் செல்கின்றனா்.

Advertisement

இங்கு படகு குழாம், இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா உள்ளிட்டவை இருப்பதால் வார விடுமுறை தினங்களில் கூட பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் இயற்கை பூங்கா, செயற்கை நீரூற்று, படகு குழாம், கோயில்கள் உள்ளன என்பதாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதாலும் பயணிகள் பெரிதும் இந்த சுற்றுலாத் தலத்தை விரும்புகின்றனா்.

இதனிடையே ஏலகிரியில் கோடை விழா கடந்த 19.4.2025-ஆம் ஆண்டு நடைபெற்றது. ஒரு நாள் முன்னதாக அறிவிக்கப்பட்டதுடன் விழா ஒரு நாள் மட்டுமே நடைபெற்றது. அதில் குறைவான மக்கள் வருகை தந்தனா்.

ஆனால் தற்போது தோ்தல் பணிகள் காரணத்தால் இதுவரை கோடை விழாவுக்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

விரைவில் பணிகள் தொடங்கி ஏலகிரியில் 2 நாள்கள் கோடை விழா நடைபெற வேண்டும் என சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையுடன் இந்தப் பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.