சுங்கச் சாவடியை தாக்கி சேதப்படுத்திய மாணவர்கள் கைது
அம்பத்தூர் அருகே, சுங்கச் சாவடி ஊழியருடன் ஏற்பட்ட தகராறில் சுங்கச் சாவடியை தாக்கி சேதப்படுத்திய கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
அம்பத்தூர் அருகே, சுங்கச் சாவடி ஊழியருடன் ஏற்பட்ட தகராறில் சுங்கச் சாவடியை தாக்கி சேதப்படுத்திய கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தாம்பரத்திலிருந்து மணலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அம்பத்தூர்-கள்ளிக்குப்பம் அருகே சுங்கச் சாவடி உள்ளது. இவ்வழியாக திங்கள்கிழமை இரவு காரில் வந்த போரூர் காரம்பாக்கத்தை சேர்ந்த கார் மெக்கானிக் அஜய்(20), தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் கேப்ரியல் (19) ஆகியோர் சுங்கக் கட்டணம் தர மறுத்து, சுங்கச்சாவடி ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, கேப்ரியல் தனது செல்லிடப்பேசி மூலம் நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, ஆந்திரத்தில் உள்ள தனியார் கலை கல்லூரியில் படித்துவரும் மாணவர் பூர்வீகம் (24), காட்டாங்குளத்தூரிலுள்ள கல்லூரியில் படித்துவரும் பெரம்பூரைச் சேர்ந்த பிரணவ் (21), வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ் (22), அம்பத்தூரைச் சேர்ந்த சுஜித்(20), மதுரவாயலிலுள்ள கலை கல்லூரியில் படிக்கும் ஆலப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடாசலம் (21) ஆகிய 5 பேரும் 3 கார்களில் வந்துள்ளனர்.
இவர்கள் 7 பேரும் அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கியதுடன், சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தினர். இதுகுறித்து சுங்கச்சாவடி மேற்பார்வையாளர் ஸ்ரீதர், அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, ஆய்வாளர் பொற்கொடி தலைமையில் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து 7 பேரையும் கைது செய்ததுடன் 4 கார்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் மணலி- தாம்பரம் மேம்பாலப் பாதையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.