பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை: ஆசிரியர்கள் விவரங்கள் பதிவேற்றம் தீவிரம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை பணியாளர்களின் வருகையை பயோமெட்ரிக்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை பணியாளர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் வகையில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில அளவில் கிராமங்களில் தரமான பள்ளிக் கல்வி கிடைக்கச்செய்யும் நோக்கத்தில் 6 கி.மீ. தூரத்துக்குள் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும், 4 கி.மீ. தூரத்தில் நடுநிலைப்பள்ளிகளும், 2 கி.மீ. தூரத்துக்குள் ஆரம்பப் பள்ளிகளும் தொடங்கி செயல்பட்டு வருகின்றன.
மேலும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நோக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக அதிக மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சலுகைகளை வழங்கிய நிலையிலும், பொதுமக்களிடையே ஆங்கிலக் கல்வி மோகம் காரணமாக நகரங்களில் தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பி வரும் நிலை உள்ளது.
இதற்குக் காரணம் கிராமங்களுக்கு சரியான நேரத்தில் ஆசிரியர்களும், பணியாளர்களும் செல்லாமல் இருப்பதுதான் என்பது ஆய்வில் தெரிய வந்தது.
இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வருகை அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் இருக்க வேண்டும்.
எனவே, அவர்களது வருகையைப் பதிவு செய்வதற்கு பயோமெட்ரிக் கருவி பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, முதல் கட்டமாக மாநில அளவில் 7,726 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.45.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் கணிப்பொறி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த 10-ஆம் தேதி பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் 2 கணினிகள் தேவைப்படும்.
தற்போது பள்ளிகளில் உள்ள கணினிகள் மிகவும் பழைமையானதாக உள்ளதால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. இதனால் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் கணிப்பொறி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: திருவள்ளூர் மாவட்டத்தில் 295 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான பயோமெட்ரிக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பள்ளிகளில் உள்ள கணினிகளையே பயன்படுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள், கைரேகைப் பதிவு மற்றும் கையொப்பம் பெறும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.