ஏரிக்கரையோர வீடுகள் இடிப்பு: கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
வேண்பாக்கம் பகுதியில் அகற்றப்பட்ட 72 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி
வேண்பாக்கம் பகுதியில் அகற்றப்பட்ட 72 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வேண்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் செல்லும் சாலையில் கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக 78 குடியிருப்பு வீடுகளில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். அவர்கள் வசித்து வந்த இடம் நீர்நிலையில் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் பொன்னேரி பேரூராட்சி அதிகாரிகள், கடந்த 2017, டிசம்பர் 8-ஆம் தேதி அங்குள்ள 78 வீடுகளை போலீஸாரின் பாதுகாப்புடன் அகற்றினர்.
அப்போது அகற்றப்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு அதே பகுதியிலேயே மாற்றுப் பகுதியில் தலா 600 சதுர அடி அளவில் மாற்று இடம் அளிக்கப்படும் என வருவாய்த் துறையினர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
எனினும், மாற்றுப் பகுதி நிலத்தில் விவசாயம் செய்து வருபவர்கள் இந்தக் குடும்பங்களுக்கு இடம் தர மறுத்தனர். இதனால் அவ ர்கள் அங்கு குடியேற முடியவில்லை.
இதன் காரணமாக வீடுகளை இழந்தவர்கள் அப்பகுதியில் உள்ள வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். அகற்றப்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு வீட்டு மனைகளை விரைந்து வழங்க வலியுறுத்தி அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொன்னேரியில் உண்ணாவிரப் போராட்டம் நடத்தினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.
அத்துடன் ஜூன் மாதம் 17-ஆம் தேதி பொன்னேரி பகுதி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் வீடுகளை இழந்த பொதுமக்கள் அகற்றப்பட்ட குடியிருப்பு பகுதியிலேயே மீண்டும் குடியேறும் போராட்டத்தை வேண்பாக்கம் பகுதியில் நடத்தினர். எனினும், அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், வீடுகள் அகற்றப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில் இன்னமும் மாற்று இடம் வழங்கப்படாததைக் கண்டித்து வீடுகளை இழந்தவர்கள் மற்றும் பொன்னேரி பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாட்சியர் புகழேந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.