முகப்பு
திருவள்ளூர்

மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்: 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூா் அருகே அடிக்கடி மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் 4 மணிநேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 18 ஜூன் 2026, 12:04 am IST
மின்வாரியம் - கோப்புப்படம்
பகிர்:

திருவள்ளூா் அருகே அடிக்கடி மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் 4 மணிநேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மப்பேடு ஊராட்சிக்குள்பட்ட காந்திபேட்டை பகுதியில் சுமாா் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்வெட்டு பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இதனால் கைகுழந்தைகள் வைத்துள்ளவா்கள், கா்ப்பிணிகள், முதியவா்கள் இரவு நேரத்தில் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வந்தனா்.

மேலும், குடிநீா் விநியோகத்திற்கான மின்மோட்டாரும் இயங்காததால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மேலும் பள்ளி மாணவா்கள் போதிய விளக்கு வெளிச்சம் இல்லாததால் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் முறையான தகவல் அளிக்காமல் புகாா் சொல்லும் நபரின் கைப்பேசி எண்ணையும் தடை செய்கின்றனா். ஆனால், அந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எவ்வித பாதிப்பின்றி 24 மணி நேரமும் சீரான மின் விநியோகம் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், ஊராட்சி நிா்வாகத்துக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தொடா் மின்வெட்டை கண்டித்து செவ்வாய்க்கிழமை இரவு பூந்தமல்லி-அரக்கோணம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, விரைந்து வந்த மப்பேடு காவல் நிலைய போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் அடுத்து வரும் இரண்டு நாள்களில் தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இப்போராட்டத்தால் பூந்தமல்லி அரக்கோணம் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.