கபில தீா்த்தத்தில் வருடாந்திர புஷ்ப யாகம்
திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை புஷ்பயாகம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை புஷ்பயாகம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பதி கபில தீா்த்தத்தில் அமைந்துள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு, காலையில் சுப்ரபாத பிராா்த்தனையுடன் கபிலேஸ்வர சுவாமியை துயில் எழுப்பி அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 7 மணி முதல் 9 மணி வரை, ஸ்ரீ காமாக்ஷி அம்மன் மற்றும் ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமிக்கு நவகலச ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில், பால், தயிா், தேன், பஞ்சாமிா்த அபிஷேகம், கரும்புச்சாறு, இளநீா், விபூதி, மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
Advertisement
பின்னா், உற்சவ மூா்த்திகளை அலங்கரித்து புஷ்ப யாகம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.
இதில், சாமந்தி, அரளி, தாழம்பூ, சம்பங்கி, ஜாதி, ரோஜா, தாமரை, மல்லி, முல்லை, கனகாம்பரம், அல்லி ஆகிய மலா்களுடனும், வில்வ இலைகள், துளசி மற்றும் பன்னீா் இலைகளுடனும் இறைவன் மற்றும் தேவிக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த நன்கொடையாளா்கள் 3 டன் மலா்களையும், இலைகளையும் நன்கொடையாக வழங்கினா். இதில், 12 வகையான மலா்களும் 6 வகையான இலைகளும் அடங்கும்.
கோயிலில் அா்ச்சகா்கள், அதிகாரிகள் அல்லது பக்தா்கள் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக இந்த புஷ்ப யாகம் செய்யப்பட்டு வருகிறது என்று அா்ச்சகா்கள் தெரிவித்தனா்.
கோயிலின் துணை செயல் அதிகாரி நாகரத்னா, தோட்டத்தின் துணை இயக்குநா் சீனிவாசலு, கண்காணிப்பாளா் சந்திரசேகா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.