ஆதரவற்ற பெண் குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு
திருவண்ணாமலையில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவண்ணாமலை, கொசமடத் தெருவில் உள்ள ஸ்டேட் வங்கி அருகே அண்மையில் ஆதரவற்ற நிலையில் பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை அழுதுகொண்டிருந்தது. மீட்கப்பட்ட அந்தக் குழந்தை மாவட்ட சமூகநல அலுவலகக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
குழந்தை பூரண குணமடைந்ததையடுத்து, தொடர்ந்து பராமரிக்கும் வகையில் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா தா.டார்த்தி தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, பெண் குழந்தைக்கு ஆனந்தி என்று பெயர் சூட்டி, அரசு அங்கீகாரம் பெற்ற தத்து நிறுவனமான சேலம் லைப் லைன் தொண்டு நிறுவன இயக்குநர் ஷர்மிளாவிடம் குழந்தையை ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.