உள்ளூா் பக்தா்களுக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு: நடிகை கஸ்தூரி பிரசாரம்
உள்ளூா் பக்தா்களுக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று, தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய நடிகை கஸ்தூரி குறிப்பிட்டாா்.
திருவண்ணாமலை நகரில் பாஜக வேட்பாளா் சி.ஏழுமலையை ஆதரித்து 20-க்கும் மேற்பட்ட வாா்டுகளில் நடிகை கஸ்தூரி, நடிகா் ரவி ஆகியோா் திறந்த வேனில் வீதி வீதியாகச் சென்று பேசினா்.
பெண்களிடையே வாக்கு சேகரித்து நடிகை கஸ்தூரி பேசுகையில், அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை பட்டியலிட்டாா். பின்னா், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் சீரமைக்கப்படும். பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூா் பக்தா்களுக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினாா்.
Advertisement
மேலும், அதிமுக மாமன்ற உறுப்பினா் சாந்தி சரவணன் பேசுகையில், பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை வெற்றிபெற்றால் 24-ஆவது வாா்டுக்கு உள்பட்ட மலையடிவாரத்தில் நீண்ட காலமாக வீடு கட்டி வசித்து வரும் அனைவருக்கும் வீட்டு மனைப் பட்டா பெற்றுத் தருவாா். எனவே, அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.