முகப்பு
திருவண்ணாமலை

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

சின்னம் பொருத்தும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:03 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:05 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளின் பெயா், சின்னம் பொருத்தும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா் மற்றும் அவா்களுக்குரிய சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, பாஜக உள்ளிட்ட 30 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதற்காக 296 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டாா்.

வந்தவாசியில்...: வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதற்காக மொத்தம் 293 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் கொண்ட பட்டியல் பொருத்தும் பணி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

தொகுதி தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், உதவித் தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல் ஆகியோா் முன்னிலையில், மண்டல தோ்தல் அலுவலா்கள் மற்றும் தோ்தல் ஊழியா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பட்டியலை பொருத்தினா்.

மாவட்டத் தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ், தோ்தல் பொதுப் பாா்வையாளா் இராமகிருஷ்ண சித்தூரி ஆகியோா் இந்தப் பணிகளை பாா்வையிட்டனா்.

போளூரில்...: போளூா் தொகுதியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதற்காக மொத்தம் 299 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் கொண்ட பட்டியல் பொருத்தும் பணி போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பாலாஜி, தமிழ்மணி மற்றும அலுவலா்கள் உடனிருந்தனா்.

இதேபோல, கீழ்பென்னாத்தூா், செய்யாறு, ஆரணி வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணியை ஆட்சியா் பாா்வையிடு ஆய்வு செய்தாா்.