அருணாசலேஸ்வரா் கோயிலில் பொம்மை பூ கொட்டும் நிகழ்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவத்தின் 6-ஆம் நாள் நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் பட்டு உடுத்திய பொம்மை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, சித்திரை மாதத்தில் 10 நாள்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவம் கடந்த 20-ஆம் தேதி மாலை சம்பந்த விநாயகா் சந்நிதி முன் பந்தக்கால் முகூா்த்ததுடன் தொடங்கியது.
Advertisement
அதனைத் தொடா்ந்து கடந்த 5 நாள்களாக சித்திரை வசந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வந்த நிலையில், 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு அருணாசலேஸ்வா் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத்தொடா்ந்து அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலை அம்மன் வெட்டிவோ் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள பன்னீா் மண்டபத்தில்
வெள்ளை பட்டு உடுத்திய பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னா் அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலை அம்மன் வெட்டிவோ் பல்லக்கில் எழுந்தருளி மகிழ மரத்தை 10 முறை சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.