தக்கோலம் அகோர வீரபத்திர சுவாமி கோயிலில் ஜூன் 7-ல் கத்திரி பூஜை நிறைவு விழா!
தக்கோலம் கோயிலில் கத்திரி பூஜை எனும் வசந்த பூஜை விழா பற்றி..
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலம் அருள்மிகு ஸ்ரீ அகோர வீரபத்திர சுவாமி திருக்கோயிலில் ஜூன் 7-ஆம் தேதி கத்திரி பூஜை எனும் வசந்த பூஜை விழா நடைபெறுகிறது.
இத்தலத்தில் உள்ள கிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஜலநாதீஸ்வரர் கோயிலுக்கு மேற்கு முகமாகக் கோயில் கொண்டு அருளுகின்றார் ஸ்ரீ அகோர வீரபத்திரர். மூலவர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் கருணைப் பொங்கும் வதனத்துடன் இடப்புறம் கையில் வில்லும், கேடயமும், வலப்புறம் அம்பும், வாளும் கொண்டு கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், அருகில் ஆட்டுத் தலையுடன் தக்கன் பணிந்து வணங்கியபடி அதி அற்புதமான கோலத்தில் வீரபத்திரர் காட்சியளிக்கின்றார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்தக்கோயிலை தக்கோலம் வகையறா ஜங்கம் குல மரபினர் தொன்றுதொட்டு பரம்பரை வழியில் குல தெய்வமாகப் பூஜித்தும், பராமரித்தும் வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்தக் கோயிலில், ஜூன் 7-ஆம் தேதியன்று வைகாசி 24-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் அருள்மிகு வீரபத்திர சுவாமி திருக்கோயிலில் அக்னி நட்சத்திரம் நிறைவை ஒட்டி கத்திரி பூஜை எனும் வசந்த பூஜை விழா 108 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் செய்து வெற்றிலை காப்பு சாற்றி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா ஆரத்தி செய்யப்பட உள்ளது.
விழா ஏற்பாடுகளைக் கோயில் ஆய்வாளர் வ. அமுதா, பரம்பரை அறங்காவலர் கே.என். பாபு, பாபு குருக்கள், கார்த்திகேயன் குருக்கள், அறக்கட்டளை குழுவினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.