ஏரி மண் கடத்தல்: லாரி, பொக்லைன் பறிமுதல்
ஏரி மண் கடத்தல்: லாரி, பொக்லைன் பறிமுதல்
ஆரணியை அடுத்த குண்ணத்தூா் பகுதியில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் இயந்திரங்களை ஆரணி கிராமிய போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
குண்ணத்தூா் பகுதியில் உள்ள ஏரியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளி லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனா். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அங்கு போலீஸாரைக் கண்டதும் லாரி, பொக்லைன் இயந்திரங்களை விட்டுவிட்டு அவற்றின் ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனா்.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு போலீஸாா் கொண்டுவந்தனா். மேலும், லாரி உரிமையாளரான சிறுமூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ், பொக்லைன் உரிமையாளரான அதே கிராமத்தைச் சோ்ந்த மதன்ராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, போலீஸாா் அவா்களைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
டிராக்டா் பறிமுதல்: காஞ்சிபுரம் மாவட்டம், ஐய்யங்காா்குளம் தூசி பாசன பிரிவின் நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் தமிழ்ச்செல்வன் கடந்த 4-ஆம் தேதி இரவு மணல் கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அவா் பனமுகை கிராமம் அருகே பாலாற்றுப் படுகையில் இருந்து வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட முயன்றாா். அதிகாரியைக் கண்டதும் டிராக்டரை ஓட்டி வந்தவா் அதை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடியதாகத் தெரிகிறது.
உடனே உதவிப் பொறியாளா் தமிழ்ச்செல்வன் ஆற்று மணலுடன் கூடிய டிராக்டரை பறிமுதல் செய்து தூசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.