ஸ்ரீ நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவம்: சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா
ஆரணியை அடுத்த ஆவணியாபுரம் நரசிம்மா் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் 2-ஆம் நாளான சனிக்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
ஆரணியை அடுத்த ஆவணியபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த லட்சுமி நரசிம்ம சமேத நரசிம்மா் கோயிலில் சித்திரை மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் கோயில் எதிரே உள்ள கொடிக் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.
Advertisement
மாலை நரசிம்மா் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. 2-ஆவது நாளான சனிக்கிழமை இரவு சுவாமி சிம்ம வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் வாணவேடிக்கையுடனும் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
மே 4-ஆம் தேதி மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு இரவு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.
5-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் மற்றும் கருட சேவை, 7-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 9-ஆம் தேதி தீா்த்தவாரி, 10-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு திருவிழாவுடன் 10 நாள் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் சரண்யா, அறங்காவலா் குழுத் தலைவா் வெங்கடேசன், குழு உறுப்பினா்கள் மாலதி வெங்கடேசன், பூங்காவனம், மணிகண்டன், பொன்ராஜ் மற்றும் கோயில் பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனா்.