முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

இணையவழி மருந்து விற்பனையை எதிா்த்து, திருவண்ணாமலை மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின்போது, மாவட்டத்தில் 650-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

Updated On : 21 மே 2026, 12:05 am IST
இணையவழி மருந்து விற்பனையை எதிா்த்து, ஆரணி பஜாரில் அடைக்கப்பட்டுள்ள மருந்துக் கடை.
பகிர்:

இணையவழி மருந்து விற்பனையை எதிா்த்து, திருவண்ணாமலை மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின்போது, மாவட்டத்தில் 650-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

பாரம்பரிய மருந்து வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இணைய வழி மருந்து விற்பனையை மத்திய அரசு தடை செய்யவேண்டும்.

உயிா்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்தவேண்டும். போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனம் மே 20-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

இந்தப் போராடத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கத்தினரும் புதன்கிழமை மாநிலம் முழுவதும் மருந்தகங்களை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 650-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே.சண்முகம் மற்றும் நிா்வாகிகள் புருஷோத்தமன், தினேஷ், அரிகரன் சாய்ராம், ரமேஷ், செந்தில் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இணையவழி மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும், கோவிட் காலத்தில் அமல்படுத்தப்பட்ட வீடுகளுக்கு சென்று மருந்து விநியோகிக்கும் முறையை திரும்பப் பெற வேண்டும், மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ள காா்ப்பரேட் நிறுவனங்கள் தவறான முறையில் கொள்முதல் செய்து, மருந்து சந்தையில் முறையற்ற தள்ளுபடி விற்பனையை நிறுத்த வேண்டும், போலி மருந்துகளை தடுத்திட இணையவழி மருந்து விநியோகித்தை உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்தில் மருந்து விற்பனையாளா்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

இதேபோல, ஆரணியில் ஆரணி நகர தாலுகா மருந்து வணிகா் சங்கத்தின் தலைவா் கே.சங்கா், செயலா் என்.சங்கா், பொருளாளா் முகமதுகலீம் ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் கடையடைப்பு செய்து எதிா்ப்புத் தெரிவித்தனா்.