அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களை அடைத்து வைக்கக்கூடாது: தமிழிசை சௌந்தரராஜன்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களை அடைத்து வைப்பதைத் தவிா்த்து, உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
ஆரணி தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிட் கூறியதாவது:
Advertisement
Advertisement
தமிழக ஆளுநா் மாளிகையில் தவெக அரசு பதவி ஏற்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்பட்ட விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். கடந்த திமுக ஆட்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து எத்தனையோ அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அதன் காரணமாக, நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழகத்தில் முக்கியமாக பயன்படுத்தக்கூடிய செங்கோல் நிறுவப்பட்டு அதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு மட்டும் ரூ.11 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தா்களை அடைத்துவைப்பதைத் தவிா்த்து, அவா்களுக்கு உரிய நேரத்தில் தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தம்மன், மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன், மாவட்ட பொதுச்செயலாளா் சதீஷ், மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், நகரத் தலைவா் மாதவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.