ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்: அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு
அனைத்துத் துறை அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (ஜாக்டோ - ஜியோ) சார்பில் நடைபெற்ற
அனைத்துத் துறை அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (ஜாக்டோ - ஜியோ) சார்பில் நடைபெற்ற காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பெருமளவில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை பணிக்கு வரவில்லை. இதனால், அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும்; 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
இதையொட்டி, மாவட்ட நிர்வாகக் கணக்குப்படி வேலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 47 சதவீத அளவிலும், வருவாய்த் துறை அலுவலகங்களில் 34 சதவீத அளவிலும், ஊரக வளர்ச்சித் துறையில் 40 சதவீத அளவிலும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்களும் அவதியடைந்தனர்.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள 13 வட்டங்களிலும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. வேலூர் அண்ணா கலையரங்கம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கே.சரவணராஜ் தலைமை வகித்தார். இந்தப் போராட்டங்களில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
அப்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கே.சரவணராஜ் கூறியது:
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 70 சதவீத ஆசிரியர்களும், 50 சதவீத வருவாய்த்துறை ஊழியர்களும், 40 சதவீத ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களும் பணிக்குச் செல்லவில்லை. இதனால், அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை வேலைநிறுத்தத்துடன் 13 வட்டங்களிலும் மறியல் போராட்டமும் நடத்தப்படும். தொடர்ந்து, 26ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்றார் அவர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அரக்கோணம் கிளைத் தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஜோசப் கென்னடி, வருவாய்த் துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி சரவணன், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி தாசபிரகாஷ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் அமர்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெமிலி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ நெமிலி வட்ட ஒருங்கிணைப்பாளர் வர்கீஸ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் சங்கர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆம்பூரில்...
ஆம்பூர் சார்-நிலை கருவூல அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆம்பூர் மற்றும் மாதனூர் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாத காரணத்தால் மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.