திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!
மகள் கண் முன்னே அப்பா படுகொலை... தனிப்படை அமைத்து விசாரணை!
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் சேங்காலிபுரத்தில் வீடு புகுந்து மேஸ்திரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேங்காலிபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேந்ர்தவர் திருமுருகன். இவரது மனைவி சுதா. செங்கல் சூளையில் மேஸ்திரியாக உள்ள திருமுருகன், தமது மனைவி, மகன், மகளுடன் எம்ஜிஆர் நகரிலுள்ள தமது வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை(மே 29) இரவு அவர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
Advertisement
Advertisement
திடீரென, அதிகாலையில் அவர்களது வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டதாம். இதையடுத்து, கதவைத் திறக்க முற்பட்ட திருமுருகன் கதவை திறப்பதற்குள் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் உள்ளே கதவை உடைத்துக்கொண்டு நுழைந்தனர்.
வீட்டினுல் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பயங்கரமான ஆயுதங்களுடன் சரமாரியாக திருமுருகனை வெட்டினர். அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்தனராம்.
இதைக் கண்டு அதிர்ந்து அவர்களைத் தடுக்கச் சென்ற சுதா, மகன் ஆகிய இருவரும் பயங்கரமாக தாக்கப்பட்டனர். அதில் இருவரும் படுகாயமடைந்து மயங்கினர்.
இதனிடையே, அவரது மகள் தடுக்கச் சென்றபோது, அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய மர்ம நபர் ஒருவர், சத்தம்போட்டால் கழுத்தை அறுத்துவிடுவதாக மிரட்டினாராம். மேலும், அவரது கண் முன்னே திருமுருகனை வெட்டி சாய்த்தனராம். அதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் உயிரிழந்துவிட்டாரா என்பதை உறுதிசெய்த பின்னரே அந்தக் கும்பல் அங்கிருந்து தாங்கள் வந்திறங்கிய இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனராம்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த குடவாசல் போலீஸார், திருமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சுதா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தப் படுகொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது தொழில் போட்டியா? என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, திருமுருகனின் உடலை வாங்க மறுத்து புதுக்குடி பகுதியில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை அதிகாரிகள் அவர்களிடம் வாக்குறுதியளித்து சமாதானப்படுத்தி அவர்களது போராட்டத்தை வாபஸ் பெறச் செய்தனர்.
இந்தக் கொலை வழக்கில் வழக்குரைஞர் ராஜா என்பவருடன் சேர்த்து கண்மணி, மணிகண்டன் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.