குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா!
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா பற்றி...
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள கெளடண்யா மகாநதி ஆற்றங்கரையோரம் பழமைவாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், வைகாசி 1 ஆம் தேதியான இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக தற்போது நடைபெற்று வருகிறது.
Advertisement
முன்னதாக மே 1-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த திருவிழா, தற்போது தரணம் பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குடியாத்தம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக மேளதாளங்களுடன் ஊர் மக்கள் எடுத்து வந்தனர்.
இந்த சிரசு திருவிழாவைக் காண வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.
வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், தெருவெங்கும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்கும் நிலையில், கூட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,300 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.