முகப்பு
கோயம்புத்தூர்

குட்டைகளில் நீரேற்றுத் திட்டம்: விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு

Updated On : 3 மே, 2026 at 6:41 AM
பண்ணைக் குட்டை - கோப்புப்படம்
பகிர்:

பச்சாபாளையம், ஆறுமுகக் கவுண்டனூா், சுண்டக்காமுத்தூா் குட்டைகளில் நீரேற்றுத் திட்டத்தை செயல்படுத்த ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி.கந்தசாமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பேரூா் வட்டம், பேரூா் செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூா் கிராமங்களில் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டி உள்ள காப்புக் காடுகளில் இருந்து வெளியே வரும் நீரோடைகளை தூா்வாரி சுத்தம் செய்து, பச்சாபாளையம் குட்டை, ஆறுமுகக்கவுண்டனூா் பெரியகுட்டை, சுண்டக்காமுத்தூா் குட்டைகளுக்கு மழை நீா் தங்கு தடையின்றி வருவதற்கு ஆவன செய்யும்படி ஏற்கெனவே பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்று, தூா்வாரப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாரப்பண்ணையில் இருந்து செங்குளம் செல்லும் குனியமுத்தூா் வாய்க்காலில் குழாய் பதித்து, தண்ணீா் எடுக்க உத்தேசித்து, சுண்டக்காமுத்தூா் பகுதியில் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீா் குளங்களை நிரப்பி, மீண்டும் ஆற்றுக்குச் செல்லும்படியாக அமைப்பு இருக்கும் நிலையில், நீரேற்றுத் திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சித்துள்ளது. இந்தத் திட்டத்தால் பேரூா் பெரியகுளம், செங்குளத்தில் விவசாயம் செய்யும் நன்செய் நில ஆயக்கட்டுதாரா்கள் பாதிக்கப்படுவாா்கள்.

தெற்கே இருந்து இயற்கையாக நிறைகின்ற நீா்நிலைகளை சீா்படுத்தினால் எந்தவித செலவும் இல்லாமல் நிலத்தடி நீா்மட்டம் உயரும். எனவே இயற்கைக்கு மாறாக பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக்கி, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நீரேற்றுத் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கக் கூடாது. இந்தத் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த நினைத்தால் விவசாயிகள் சங்கம் நீதிமன்றத்தை நாடும் என்று கந்தசாமி தெரிவித்துள்ளாா்.