உலக ஹீமோஃபீலியா தினம் அனுசரிப்பு
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஹீமோஃபீலியா தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஹீமோஃபீலியா தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை ஹீமோஃபீலியோ சொசைட்டி இணைந்து உலக ஹீமோஃபீலியா தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் ஆகியோர் பலூன்களைப் பறக்கவிட்டனர். இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:
ஒருவரது உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் ஐந்து நிமிடங்களுக்குள் ரத்தக் கசிவு நின்று, உறைந்து போகும். ஆனால், ஹீமோஃபீலியோ குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் உறையாமல் கசிந்து கொண்டே இருக்கும். இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
ரத்தக் காரணிகள் மற்றும் மரபு அணு மாற்றத்தின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த குறைபாடு உள்ள ஆண்கள், தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த ஜீன்களை அளிப்பதில்லை. ஆனால், பெண் குழந்தைகளுக்கு அளிக்கிறார். அவர்களுக்கு பாதிப்பு இருக்காது. அதே நேரத்தில் அவர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும். கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஹீமோஃபீலியா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை ஹீமோஃபீலியா நோய் பாதிக்கப்பட்ட 265 பேர் இந்த மையத்தில் பதிவு செய்துள்ளனர் என்றார்.
அதைத் தொடர்ந்து, கோவை சர்வதேச விமான நிலையம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சாவியை விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் அசோகனிடம் வழங்கினார்.