கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
இந்து சமய உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் ஓவியக் கண்காட்சி நடத்திய லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை
இந்து சமய உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் ஓவியக் கண்காட்சி நடத்திய லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் பாரத மாதா, ஆஞ்சநேயர், திரிசூலம் ஆகியவற்றை இழிவுபடுத்தும் விதமாகவும், இந்து சமயத்துக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் ஓவியங்கள் இடம்பெற்று இருந்தன. மேலும், கருத்தரங்கம் என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் மீது அவதூறு பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் ஜாதி உணர்வை தூண்டும் வகையில் உரை நிகழ்த்தி உள்ளனர்.
அரசு நிதியுதவியுடன் செயல்படும் லயோலா கல்லூரியில் இந்து சமயத்தை புண்படுத்தும் வகையில் கண்காட்சியை நடத்தியுள்ளனர். இந்து சமய உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்ட லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் கல்லூரியை அரசுடமை ஆக்கி, கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் பிப்ரவரி 3 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.