மாவட்டத்தில் நாளைமுதல் மனித நேய வார விழா
கோவை மாவட்டத்தில் மனித நேய வார விழா ஜனவரி 24 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கோவை மாவட்டத்தில் மனித நேய வார விழா ஜனவரி 24 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடர் நலத் துறையும், செய்தி மக்கள் தொடர்புத் துறையும் இணைந்து அரசுத் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 24 ஆம் தேதி கண்காட்சியை நடத்த உள்ளது.
ஜனவரி 25 ஆம் தேதி சௌரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள், பெற்றோருடன் இணைந்து மனமகிழ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜனவரி 26 ஆம் தேதி ஒடந்துறை கிராமத்தில் சமபந்தி போஜனமும், பொள்ளாச்சி நேரு திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், விடுதிகள், கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணவர்கள் சார்பில் நாட்டியம், நாடகம், பேச்சு, கலை ஆகியப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. ஜனவரி 27 ஆம் தேதி காவல் துறை சார்பில் மதத் தலைவர்கள், ஆதிதிராவிடர் இன சான்றோர்கள் பங்கேற்கும் நல்லிணக்க கூட்டம் மற்றும் காவல் துறையினர், வழக்குரைஞர்கள், நீதிபதிகள் பங்கேற்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த கருத்தரங்கம் ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெறுகிறது.
ஜனவரி 28 ஆம் தேதி தாமஸ் கிளப்பில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், விடுதிகள், கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணவர்கள் சார்பில் நாட்டியம், நாடகம், பேச்சு, கலை ஆகியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஜனவரி 29 ஆம் தேதி மாவட்ட தொழில் மையத்தில் சமுதாயத்தில் முன்னேற்ற நிலையில் உள்ள ஆதிதிராவிடர் அலுவலர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நிறைவு விழா நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.