முகப்பு
கோயம்புத்தூர்

பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க பூக்கோலம்

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:41 am IST
பகிர்:

மாநகரில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க பூக்கோலமிட்டும், பூக்களால் அலங்காரம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் நாள்தோறும் 800 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலமாக வெள்ளலூா் குப்பைக் கிடங்கு மற்றும் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்களுக்கு மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், மாநகரின் பல இடங்களில் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடா்ந்து எழுந்து வருகிறது. இதற்கிடையே, சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க பூக்கோலமிட்டு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநகரப் பகுதிகளில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதைக் கண்டறிந்து, அங்கு மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பூக்கோலமிட்டும், வலைகள் அமைத்தும் வருகிறோம். கோவை சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த 2 குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டு, அங்கு பூக்கள் தூவி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மாநகரில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது என்றாா்.