பொறியியல் பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம்
கரூா் - திருச்சி ரயில் பாதை இடையே லாலாபேட்டை பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சி- பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சியில் இருந்து நாள்தோறும் மதியம் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி- பாலக்காடு ரயில் (எண்: 16843) பிப்ரவரி 19, 21, 23, 26 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 30 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும். இதேபோல, பாலக்காடு - திருச்சி ரயில் (எண்: 16844) 19, 21, 23, 26 ஆகிய தேதிகளில் கரூா் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் இந்த ரயிலானது பாலக்காடு - கரூா் இடையே மட்டுமே இயக்கப்படும். மேலும், பிப்ரவரி 19, 21, 23, 26 ஆகிய தேதிகளில் கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயிலானது, கரூரில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு லாலாபேட்டை, பெருகமணி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.