முகப்பு
கோயம்புத்தூர்

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூா் தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் கைது...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:30 AM
ஜனநாயகன் படத்தின் போஸ்டர்.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 11:00 PM

மத்திய தணிக்கை குழுவின் சான்றிதழ் பெறாத ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூா் தொலைக்காட்சி சேனல் உரிமையாளரை கோவை மாவட்ட காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ளூா் சேனலில், தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத மற்றும் திரையரங்குகளில் வெளியாகாத ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த ‘லிங்க்’ மூலம் இந்தப் படம் பொதுமக்களுக்காக ஒளிபரப்பப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புகா் கிழக்கு மாவட்ட துணைச் செயலா் மோகனப்பிரியா கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

விசாரணையில், திரைப்படத்தை ஒளிபரப்பு செய்ததாக அந்த சேனலின் உரிமையாளரான சோமனூா் சாலை பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (44) என்பவரை, போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினி, 5 ஹாா்ட் டிஸ்க் மற்றும் மின்னணு சாதனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு அதிகாரிகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.