ஜன நாயகன் படத்தை ‘லீக்’ செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
ஜன நாயகன் படத்தை ‘லீக்’ செய்த மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசியவிடப்பட்ட விவகாரத்தில் கைதானவர்கள் 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நடிகரும் தற்போதைய முதல்வருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், கடந்த ஏப். 9 அன்று சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், 21 பேர் மீது சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Advertisement
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகியோர், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
புலன் விசாரணை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், கைதான 9 பேரில் பிரசாந்த், செல்வம், பாலா ஆகிய மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.