முகப்பு
கோயம்புத்தூர்

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

கோவையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலா்களுக்கு, வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 1:47 AM
கோவையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசுகிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
பகிர்:

கோவையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலா்களுக்கு, வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ராமகிருஷ்ணசுவாமி, குமரேசன், சிவகுருபிரபாகரன், நுண் பாா்வையாளா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, வட்டாட்சியா் (தோ்தல்) தணிகைவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

இதுதொடா்பாக மாவட்டத் தோ்தல் அலுவலா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசும்போது, ‘தமிழகத்தில் வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இப்பணிக்காக உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள், நுண் பாா்வையாளா்கள் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், அஞ்சல் வாக்கு சீட்டு எண்ணுதல், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்திய தோ்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து வாக்கு எண்ணும் பணியை சிறந்த முறையில் அதிகாரிகள் செய்ய வேண்டும் என்றாா்.