முகப்பு
சென்னை

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி: அலுவலா்களுக்கு பயிற்சி

சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான 3 நாள்கள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 26 மே 2026, 12:17 am IST
தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநா் சுந்தரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அலுவலா்கள்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான 3 நாள்கள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

நாட்டின் 16 -ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதனடிப்படையில் தமிழகம், புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ரூ.540 கோடியில் நடைபெறும் எனக் கூறப்பட்டது. தமிழகம், புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக பணி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தோ்தல் முடிந்துள்ள நிலையில், சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இப்பணிகள் ஜூனில் தொடங்கி ஆகஸ்ட் வரை முதல்கட்டமாகவும், 2027 பிப்ரவரி முதல் இரண்டாம் கட்டமாகவும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான 3 நாள்கள் பயிற்சி மாநகராட்சி அம்மா மாளிகை வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. பயிற்சியை மாநகராட்சி ஆணையரும், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவருமான ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

பணியில் 1.05 லட்சம் போ்: தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநா் சுந்தரேஷ்பாபு பணிகள் செயல்பாடுகளை விளக்கிப் பேசுகையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் முழுக்க முழுக்க எண்ம வழிகளே பின்பற்றப்படவுள்ளன. அதன்படி, கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோரின் கைபேசிகளில் அதற்கான செயலிகள் பதிவேற்றப்பட்டு அதில் 33 கேள்விகள் அடிப்படையிலான விவரங்கள் பதிவு செய்யப்படவேண்டும்.

மக்கள் தங்களது விவரங்களை தாங்களாகவே இணையதளத்தில் பதிவேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் தாங்களாகவே விவரங்களை பதியும் முறை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம். கணக்கெடுப்புப் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களையே ஈடுபடுத்த வேண்டும். தனியாரை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தக் கூடாது. பணிக்கான கணினி மற்றும் தொழில்நுட்ப ஊழியரை சம்பந்தப்பட்ட அலுவலா்களே நியமித்துக் கொள்ளலாம் என்றாா்.

பயிற்சியில் மாநகராட்சியைச் சோ்ந்த மண்டல அலுவலா்கள், பொறியாளா்கள், வருவாய் அலுவலா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையரும், மாநகர மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலருமான ம.பிருத்விராஜ் (வருவாய், நிதி) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பயிற்சி புதன்கிழமை (மே 27) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.