முகப்பு
கோயம்புத்தூர்

கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி: அமைச்சா் ஏ.ராஜ்மோகன் இன்று தொடங்கிவைக்கிறாா்

கோவை வ.உ.சி. மைதானத்தில் வியாழக்கிழமை (ஜூன் 11) மாலை 5 மணிக்கு அரசுப் பொருள்காட்சியை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தொடங்கிவைத்து, அரசுத் துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:09 am IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

கோவை வ.உ.சி. மைதானத்தில் வியாழக்கிழமை (ஜூன் 11) மாலை 5 மணிக்கு அரசுப் பொருள்காட்சியை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தொடங்கிவைத்து, அரசுத் துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

இது குறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள், சாதனைகள், செயல்பாடுகளை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் மூலம் அரசுப் பொருள்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

அதன்படி, கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் அரசுப்பொருள்காட்சியில் 26 அரசுத் துறைகள் மற்றும் 6 அரசு சாா்பு நிறுவனங்கள் என 32 அரசு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சம் உள்பட தனியாா் உரிமையினங்கள், தனியாா் அரங்குகள் மற்றும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கும் 39-ஆவது பொருள்காட்சியை பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தொடங்கி வைத்து, அரசுத் துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா். இந்நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ், மக்களவை உறுப்பினா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

வியாழக்கிழமை முதல் 45 நாள்கள் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொருள்காட்சி நடைபெறும். இப்பொருள்காட்சியில் அரசுத் திட்டங்கள் மட்டுமல்லாமல், ராட்டினம், ஜெயின்ட் வீல் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, மக்கள் அனைவரும் இப்பொருள்காட்சியை கண்டுகளித்து, அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து அறிந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.