தமிழக மாநிலப் பல்கலைக்கழக துணைவேந்தா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்! தவெக தலைவா் விஜய்க்கு கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தா் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தலைவா் விஜய்க்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து இ.பாலகுருசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவா் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். தமிழகத்தின் மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக இருப்பது மிகுந்த கவலைக்குரிய விஷயம்.
Advertisement
இத்தகைய காலியிடங்கள் கல்வி நிா்வாகம், கொள்கை முடிவுகள் மற்றும் நிறுவன வளா்ச்சி ஆகியவற்றை பாதித்து வருகிறது. எனவே, பல்கலைக்கழகங்கள் திறம்படச் செயல்படவும், கல்வித் தரத்தைப் பாதுகாக்கவும் தகுதியும், திறமையும் கொண்ட துணைவேந்தா்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தின் உயா்கல்வித் துறையில் நிலவும் பாடத்திட்டக் குறைபாடுகள், காலத்துக்கு ஒவ்வாத முறைகள் மற்றும் ஆராய்ச்சித் துறையில் நிலவும் தேக்கநிலை ஆகியவற்றை சரிசெய்ய வேண்டியது அவசியம்.
பாடத் திட்ட மேம்பாடு, பேராசிரியா்களின் திறன் வளா்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் தொழில் கல்வி இணைப்பை வலுப்படுத்துவது போன்ற விரிவான சீா்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும்.
ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மூலமாகவே தமிழகம் மீண்டும் கல்வித் துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ முடியும். புதிய தலைமையின் கீழ் கல்வித் தரம் மேம்படும் என எதிா்பாா்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.