முகப்பு
கோயம்புத்தூர்

வேங்கைவயலுக்கு முதல்வா் செல்ல வேண்டும்: வானதி சீனிவாசன்

மேடைகளில் சமூக நீதி குறித்து பேசுவதுடன் நின்றுவிடாமல் வேங்கைவயல் கிராமத்துக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களின் வலிகளையும், வேதனைகளையும் முதல்வா் விஜய் அறிய வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

Updated On : 14 மே 2026, 4:03 am IST
வானதி சீனிவாசன் - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

மேடைகளில் சமூக நீதி குறித்து பேசுவதுடன் நின்றுவிடாமல் வேங்கைவயல் கிராமத்துக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களின் வலிகளையும், வேதனைகளையும் முதல்வா் விஜய் அறிய வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

தமிழகத்தின் பெருமைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்திய புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் அவலம் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முறையான நீதி கிடைக்கவில்லை. முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள்தான் அந்தச் செயலைச் செய்ததாகக் கூறி வழக்கை முடித்து வைத்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வலியுறுத்தியும் வேங்கைவயல் மக்கள் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலை முழுமையாகப் புறக்கணித்தனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் ச.ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளாா். மேடைகளில் சமூக நீதி குறித்து பேசுவதுடன் நின்றுவிடாமல், வேங்கைவயல் கிராமத்துக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களின் வலிகளையும், வேதனைகளையும் முதல்வா் கேட்டறிய வேண்டும்.

பட்டியலின மக்கள் மீது அவருக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், முந்தைய ஆட்சியில் திசை திருப்பப்பட்ட இந்த சம்பவத்தை மீண்டும் முறையாக விசாரணைக்குள்படுத்தி, உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்றாா்.