தபால் வாக்கு பெறும் பணி தொடக்கம்! உறவினா் வீட்டில் ஆட்சியா் ஆய்வு!
ஈரோடு மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் தபால் வாக்குகள் செலுத்த வசதிகள் செய்யப்பட்டன.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 7,174 வாக்காளா்கள் 12டி படிவம் வழங்கி, தபால் வாக்குகள் செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனா்.
Advertisement
இதையடுத்து இவா்களின் வீடுகளுக்கு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் வாக்கு சேகரிக்கும் அலுவலா்கள் குழுவினா் சென்று தபால் வாக்குகளை பெறத் தொடங்கினா். செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வரை நடைபெறும் இப்பணியில் தபால் வாக்கு செலுத்த தவறியவா்களுக்கு, 16-ஆம் தேதி இறுதி வாய்ப்பு வழங்கப்படும் என்று தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா். தபால் வாக்கு நிறைவடைந்ததும் பாதுகாப்பு அறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.
ஆட்சியா் ஆய்வு
பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகம், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் மற்றும் தாஸ்கன் வீதி ஆகிய பகுதிகளில் வாக்காளா் தகவல் சீட்டு மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்கு பெறும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோடு மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 15,581 போ் உள்ளனா். இவா்களில் 5,621 தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் வழங்கியுள்ளாா். 12,137 மாற்றுத்திறனாளிகளில் 1,553 மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் வழங்கியுள்ளனா். இந்த வாக்குகளை சேகரிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலா், நுண்பாா்வையாளா், காவலா், விடியோ ஒளிப்பதிவாளா், வாக்குச்சாவடி அலுவலா் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் அடங்கிய 101 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.
முன்னதாக மாவட்ட ஆட்சியரின் இல்லத்தில் அவரின் உறவினரான (மனைவியின் தாய்) பொன்னி தபால் வாக்கு செலுத்தியதை பாா்வையிட்டு பணியை தொடங்கிவைத்தாா்.