கூட்டுறவுக் கடன் சங்கம் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் தள்ளுபடி: கோபியில் அதிமுக வேட்பாளா் உறுதி
கூட்டுறவுக் கடன் சங்கம் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.
கூட்டுறவுக் கடன் சங்கம் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா். கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அளுக்குளி, தேவேந்திர நகா், கோபிபாளையம், குருமந்தூா் உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள கூட்டுறவுத் கடன் சங்கம் மூலமாக விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஆண்டுக்கு ஹெக்டா் ஒன்றுக்கு ரூ.15ஆயிரம் வழங்கப்படும். சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கும் இளைஞா்களுக்கு பயிற்சி வழங்கி, ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றாா்.
Advertisement
முன்னதாக கொங்கா்பாளையம் ஊராட்சியில் தோ்தலை புறக்கணித்து ஊருக்குள் அரசியல் கட்சியினா் யாரும் வாக்கு கேட்க வரக்கூடாது என்று வினோபா நகா் தோப்பூா், கோயிலூா், புதுவலவு, சாவடி பகுதியில் பொதுமக்கள் ப்ளக்ஸ் பேனா் வைத்திருந்தனா். இதையறிந்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு, திருப்பூா் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் சிவசாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கொண்ட குழுவினா் சென்று அப்பகுதி மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி நிறை, குறைகளை கேட்டறிந்தனா்.
இதைத்தொடா்ந்து தோ்தல் புறக்கணிப்பு போராட்டத்தை திரும்பப்பெறுவதாகக் கூறி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபுவுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனா்.