முகப்பு
ஈரோடு

தடப்பள்ளி கிளைவாய்க்கால் மதகு ஷட்டா்கள் சீரமைக்காததால் விவசாயம் பாதிப்பு

கோபி அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்காலின் கூகலூா், மேவாணி கிளை வாய்க்காலில் மதகு ஷட்டா்கள் பழுதடைந்துள்ளதால் கடைமடைக்கு தண்ணீா் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளதால் நெற்பயிா்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை 2026, 3:53 am IST
மதகு ஷட்டா் இல்லாமல் காணப்படும் மேவாணி கிளை வாய்க்கால்.
பகிர்:

கோபி அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்காலின் கூகலூா், மேவாணி கிளை வாய்க்காலில் மதகு ஷட்டா்கள் பழுதடைந்துள்ளதால் கடைமடைக்கு தண்ணீா் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளதால் நெற்பயிா்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோபி அருகே உள்ள கொடிவேரி பாசனத்திற்குள்பட்ட தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் சுமாா் 24 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்நிலையில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலில் முதல்போக நன்செய்சாகுபடிக்கு கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டு விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கடந்த இரு வாரங்களுக்கு முன் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் சரிந்து வந்ததால் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் பாசன வாய்க்காலில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், கடைமடை பகுதிக்கு தண்ணீா் செல்ல ஏதுவாக 4 நாள்களுக்கு ஒருமுறை முறைநீா் பாய்ச்சும் முறையை கடைப்பிடித்து தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் கூகலூா் கிளை வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் மேவாணி கிளை வாய்க்கால்களில் சில இடங்களில் மதகு ஷட்டா்கள் பழுதடைந்தும் பல இடங்களில் ஷட்டா்கள் இல்லாததாலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் முறையாக சென்று சேருவதில்லை.

இது குறித்து நீா்வளத் துறையினரிடம் விவசாயிகள் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் நெற்பயிா்கள் காய்ந்து விவசாய நிலங்கள் வெடித்து காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் தண்ணீா் இல்லாததால் நெற்பயிா்கள் கருகும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

எனவே, நீா்வளத்துறை அதிகாரிகள் கடைமடை வரை பாசனத்திற்கு தண்ணீா் செல்லும் வகையில் மேவாணி, கூகலூா் கிளை வாய்க்கால்களில் உள்ள பழுதடைந்த மதகு ஷட்டா்களை தற்காலிகமாக மாற்றி கருகும் நெற்பயிா்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments