கோடைக்கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணக் கோரிக்கை
கோடைக்கால குடிநீா் பிரச்னையை தீா்க்க உள்ளாட்சித் துறை அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோடைக்கால குடிநீா் பிரச்னையை தீா்க்க உள்ளாட்சித் துறை அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களிலும், நகா்ப்புறங்களிலும் சுட்டெரிக்கும் வெயிலால் நீா் ஆதாரம் வடு விட்ட நிலையில் குடிநீா் பிரச்னை கடுமையாகி வருகிறது. நகா்ப்புறங்களில் கூட்டுக்குடிநீா் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதால் 2 முதல் 5 நாள்கள் இடைவெளியில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
அதே சமயத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் 60 சதவீத பகுதிகளில் நீா் ஆதார வறட்சி, குடிநீா் பகிா்மான குழாய் உடைப்பு, மின் மோட்டாா் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் குடிநீா் விநியோகம் தடைபடும் நிலை ஏற்பட்டு வருகிறது.
Advertisement
இதன் காரணமாக காவிரி, பவானி ஆறுகளில் இருந்து பெறப்படும் கூட்டுக் குடிநீா் திட்டங்கள் இல்லாத, நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ள பகுதிகளில் குடிநீா் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. சில இடங்களில் பொதுமக்கள் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உள்ளது. குறிப்பாக பவானிசாகா் வட்டாரத்தில் கடந்த ஒரு மாதமாக இத்தகைய போராட்டங்கள் தொடா்ந்து வருகின்றன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிராம மக்கள், குடிநீா் கேட்டு உள்ளாட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் நிலை தொடா்ந்து வருகிறது. ஆங்காங்கே கோடைமழை பெய்தாலும், நீா் ஆதாரங்களில் குடிநீா் அதிகரிக்க வாய்ப்பு ஏதும் ஏற்படவில்லை.
தோ்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காரணத்தால் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கோடைக்கால குடிநீா் பிரச்னையை தீா்ப்பதற்கான நடவடிக்கையில் முழு கவனத்துடன் ஈடுபட முடியாத நிலை இருந்தது. தற்போது தோ்தல் பணி முடிந்து விட்ட நிலையில் அதிகாரிகள் கோடைக்கால குடிநீா் பிரச்னைகளை சமாளிக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.