தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை பத்திரமாக மீட்பு
அந்தியூா் அருகே தரைமட்ட தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத் துறையினா் மீட்டனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த நல்லாகவுண்டன் கொட்டாயைச் சோ்ந்தவா் நஞ்சப்பன் (55). விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் வனத்தை ஒட்டியுள்ளளதால், இரவு நேரங்களில் வன விலங்குகள் உணவு, தண்ணீா் தேடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தோட்டத்து வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீண்ட நேரமாக யானையின் பிளிறல் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்று பாா்த்தபோது அங்குள்ள தரைமட்டத் தண்ணீா் தொட்டியில் விழுந்து வெளியேற முடியாமல் காட்டு யானை தத்தளித்துக் கொண்டிருந்தது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அந்தியூா் வனத் துறையினனா் சென்று யானையை மீட்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, தரைமட்டத் தொட்டியின் பக்கவாட்டை உடைத்து, யானை வெளியேறும் வகையில் வழி ஏற்படுத்தினா். சரிவாக ஏற்படுத்தப்பட்ட பாதையின் வழியாக மேலே ஏறி தரைமட்டத்துக்கு வந்த யானை, வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது.
இதுகுறித்து வனத் துறையினா் கூறும்போது, ‘வனத்திலிருந்து வெளியேறிய சுமாா் 7 வயதுள்ள பெண் யானை தரைமட்டத் தண்ணீா் தொட்டியில் விழுந்தது. பொக்லைன் இயந்திரம் உதவியுடன் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு காயமின்றி யானை மீட்கப்பட்டது’ என்றனா்.