லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம்: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தூள் தேக்கம்
மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தூள் தேக்கம் அடைந்துள்ளது.
மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தூள் தேக்கம் அடைந்துள்ளது. தொடர்ந்து இப்போராட்டம் நீடித்தால் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் அபாயமேற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 770 லாரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான லாரிகள் தேயிலைத் தொழிலோடு தொடர்புடையவையாகும். தற்போது நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 770 லாரிகளும் பங்கேற்றுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் தேயிலைத் தொழிலோடு மட்டுமின்றி விவசாயத் தொழிலோடும் தொடர்புடையவையாகும்.
இதில் கடந்த வியாழக்கிழமை வரை குன்னூரில் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் பங்கேற்ற சுமார் 6 லட்சம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு விட்டது.
இதையடுத்து தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வரும் தேயிலைத்தூள் நிலுவையிலுள்ளது. இந்தப் போராட்டம் வரும் வியாழக்கிழமை வரையும் தொடர்ந்தால் சுமார் 10 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம் ஏற்படும்.
அப்போது தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்கான விலையை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். ஆனால், அதற்குள் இப்போராட்டம் முடிவுக்கு வந்து விடுமென எதிர்பார்க்கப்படுவதால் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.
விவசாயத்தை பொருத்தமட்டில் தற்போது உதகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழைக் காலம் என்பதால் தாழ்வான பகுதிகளில் விவசாயத் தொழில்கள் பெரிய அளவில் நடைபெறுவதில்லை.
மேட்டுப்பாங்கான இடங்களில் மட்டுமே விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் மலைக்காய்கறிகளும் பிக் அப் வாகனங்களின் மூலமும், மினி லாரிகளின் மூலமும் மேட்டுப்பாளையம் மற்றும் கர்நாடக சந்தைகளுக்குகொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் தற்போது அரசுப் பேருந்துகளின் மூலமும் காய்கறிகளை இலவசமாகவே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் காய்கறிகளை பிற பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்காமல் பொருள்களைக் கொண்டு செல்லும் லாரிகளைத் தடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதால் அத்தகைய வன்முறை சம்பவங்கள் நீலகிரியில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.