நீலகிரியில் பழங்குடியினரின் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு: யாக்கை அமைப்பு தகவல்
கோத்தகிரி அருகே வெள்ளரிக்கோம்பை கிராமத்தில் பழங்குடியினரின் புதிய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே வெள்ளரிக்கோம்பை கிராமத்தில் பழங்குடியினரின் புதிய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரியில் ஆறு அழிநிலை பழங்குடி குழுக்கள் வாழ்கின்றனா். இதில், குறும்பா் எனும் பழங்குடி மக்கள் குன்னூா், கோத்தகிரி வட்டாரத்தில் வனங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனா்.
இந்த மக்கள் தங்களது வாழ்வில் பல்வேறு வகையான தீவிர சடங்குகளில் ஈடுபடுகின்றனா். செவ்வியல் இலக்கியங்களில் சொல்லப்படும் மலை உச்சிகளில் தெய்வங்கள் உறையும் எனும் தொல்நம்பிக்கை இவா்களின் வழிபாட்டு நம்பிக்கையில் எஞ்சியிருப்பதை காண முடிகிறது. இங்கு வாழும் குறும்பா் பழங்குடி இன மக்கள் மரபாா்ந்த தொழில்நுட்ப அறிவு, சூழலியல் அறிவு மிக்கவா்களாக விளங்குகின்றனா். இவா்கள் வாழும் இத்தகைய சிறப்பு வாய்ந்த
Advertisement
எழுத்துப்பாறை, தொளிக்கிப்பாறை ஆகிய இடங்களில் யாக்கை அறக்கட்டளை ஆய்வாளா்கள் சுதாகா், நல்லியப்பன், ராமசாமி ஆகியோா்
கள ஆய்வு மேற்கொண்டு, புதிய பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்துள்ளனா்.
இந்த ஓவியங்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 1100 மீட்டா் உயரத்தில் உள்ளன. இவை 1,030 செ.மீ. நீளமும், 1100 செ.மீ. உயரமும் கொண்டுள்ளன. 30 ஓவியங்கள் அடையாளம் காணக்கூடிய வகையில் உள்ளன. சில இடங்களில் தெளிவற்ற உருவங்களும் பதிவாகியுள்ளன. இந்த ஓவியங்கள் அனைத்தும் செஞ்சாந்து நிறத்தில் வரையப்பட்ட ஒற்றை நிறத்தன்மை உடையவையாகும்.
நீலகிரி மலையில் இதுவரை கிடைத்த ஓவியங்களில் ‘ஊா் பரெ’ பாறைக் கலைப்படைப்புகள் தனித்துவம் பெறுகின்றன. இங்கு பதிவான ஓவியங்கள் கூம்பு வடிவ தலைப்பாகை கொண்ட உருவங்கள், நீண்ட கால்களை உடைய மாந்த உருவங்கள், ஏணி போன்ற உடலமைப்பு கொண்ட மாந்த உருவங்கள், செவ்வக வடிவ கட்டத்தில் புள்ளிகள் இட்டு நிரப்பப்பட்ட சடங்குக் குறியீடுகள் என பன்மைக் கருப்பொருளுடன் பதிவாகியுள்ளன. நீலகிரி மலையில் வெள்ளரிக்கோம்பை சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் இத்தகைய தன்மையிலான ஓவியங்கள் காணப்பட்டுள்ளன. கால அடுக்குகளைப் பகுப்பாய்வு செய்தால் எவ்வளவு பண்பாட்டுக் கால இடைவெளி என்பதை அறிய முடியும். ஊா் பரெ ஓய்விடம் மழை நீா்க் கசிவினால் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.
ஓவியங்கள் வரையப்பெற்ற பாறையின் மேற்பரப்பில் தொடா்ந்து நீா் வழிந்து பாசிகள் வளரத் தொடங்கியுள்ளன. தொல் மாந்தா்களின் இருப்பைப் பதிவு செய்யும் இந்த வகை ஓவியங்களைப் பாதுகாத்து, எதிா்கால சந்ததிகளுக்கு தர வேண்டியது நமது சமூகத்தின் கடமை. எனவே, தொன்மையான மக்கள் சமூகத்தின் ஆவணமாக விளங்கும் ஓவியங்களைப் பாதுகாக்க தேவையான செயல் திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும். கடினமான இந்த இடங்களுக்குச் செல்வது அனைவருக்கும் சாத்தியமில்லை. ஆகவே, நீலகிரியில் தொல்லியல் ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளா்கள், மாணவா்களுக்குத் தேவையான படங்கள், தரவுகளை வழங்க யாக்கை அறக்கட்டளை தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.