அரசின் நலத் திட்ட உதவிகளை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர்
தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் முன்னேற்றத்துக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை
தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் முன்னேற்றத்துக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், காட்டூர் கிராமத்தில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி முன்னிலை வகித்தார். இதில், 22 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்பட ரூ. 92,500 மதிப்புள்ள அரசின் நலத் திட்ட உதவிகளை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் வழங்கினார்.
அதன் பின்னர் அவர் பேசியதாவது: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசின் திட்டங்களை கண்காணிக்கும் பணியாகும். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, பொது கழிப்பறை, தனி நபர் கழிப்பறை கோரி மனுக்களை அளித்துள்ளனர். இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களைத் தேடி சென்று குறைகளைக் கேட்கும் முகாம்கள் நடத்துவதன் மூலம் அவர்களின் குறைகளுக்குத் தீர்வுகாண முடிகிறது. மேலும், மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்களைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து, தங்கள் தகுதிக்கேற்ப நலத் திட்ட உதவியைப் பெற்றுக்கொள்ளவும் முடிகிறது. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் முன்னேற்றத்துக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து அவர் திருப்பூரில் உள்ள ஆதி திராவிடர் நலத் துறை மாணவியர் தங்கும் விடுதியைப் பார்வையிட்டார். மாநில ஆதி திராவிடர் நலக் குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் மகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.