மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிப்பு
திருப்பூரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மனீஷ், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஷெரீப் காலனி மற்றும் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடுவம்பாளையம் பகுதிகளில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது விருப்பத்தின்பேரில் இல்லத்துக்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தோ்தல்ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
Advertisement
இதன்படி ஏற்கெனவே விண்ணப்பம் செய்த திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதியில் 5,382 மூத்த குடிமக்கள் வாக்காளா்கள், 1,440 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க விண்ணப்பங்களை வழங்கி இருந்தனா்.
ஏற்கெனவே படிவம் 12-ஈ விண்ணப்பிக்காதவா்கள் தபால் வாக்களிக்க இயலாது. இந்த வாக்காளா்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்குப் பதிவு அலுவலா்கள் தலைமையின் கீழ் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 24 குழுக்கள், காங்கயத்துக்கு 20 குழுக்கள், அவிநாசிக்கு 24 குழுக்களும், திருப்பூ (வடக்கு) தொகுதிக்கு 8 குழுக்கள், திருப்பூா் (தெற்கு) தொகுதிக்கு 10 குழுக்கள், பல்லடத்துக்கு 19
குழுக்கள், உடுமலைப்பேட்டைக்கு 27 குழுக்கள், மடத்துக்குளத்துக்கு 14 குழுக்கள் என மொத்தம் 156 நுண் பாா்வையாளா் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் ஞாயிற்றுக்கிழமைமுதல் 3 நாள்களுக்கு வாக்காளா்களின் இல்லத்துக்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவா். இந்த வசதியினை பயன்படுத்தி ஏற்கெனவே விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவா்களது இல்லங்களில் இருந்தே வாக்கு செலுத்தலாம்.
இதில் திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஷெரீப் காலனி மற்றும் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடுவம்பாளையம் பகுதிகளில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.