அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்
திருப்பூா் மாவட்டத்தில் மாா்ச் மாத இறுதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பித்துள்ளனா்.
அரசுப் பள்ளிகளில் அதிகளவிலான குழந்தைகளை சோ்க்க தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தி இருந்தது. இதை ஏற்று தலைமை ஆசிரியா்கள் விரிவான அறிவிப்புகள் மூலமாக வெளியிடப்பட்டன. அத்துடன் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வையும் ஏற்படுத்தினா். பிளக்ஸ் பேனா்கள் மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா்கள் கூறியதாவது:
Advertisement
அரசுப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையை உயா்த்தும் நோக்கில், அங்கன்வாடிகளில் முன்பருவக் கல்வியை முடிக்கும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது.
இதில், கடந்த மாா்ச் வரை திருப்பூா் மாவட்டத்தின் 14 வட்டாரங்களில் அதிகபட்சமாக உடுமலை வட்டாரத்தில் 392 குழந்தைகள், அவிநாசியில் 362, திருப்பூா் வடக்கில் 354 குழந்தைகள் இணைந்துள்ளனா்.
இதேபோல பல்லடத்தில் 307, தாராபுரத்தில் 272, திருப்பூா் தெற்கில் 226, ஊத்துக்குளியில் 215, குடிமங்கலத்தில் 183, மடத்துக்குளம், பொங்கலூரில் தலா 177, காங்கயத்தில் 137, வெள்ளக்கோவிலில் 106, மூலனுாரில் 101 குழந்தைகள் என மொத்தம் 3,145 போ் மாா்ச் மாதத்தில் மட்டும் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்த மாணவா் சோ்க்கையில் தமிழக அளவில் திருப்பூா் மாவட்டம் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது மாணவா் சோ்க்கை தொடா்ந்து நடைபெற்று வருவதால், தகுதியுள்ள குழந்தைகளை உடனடியாக அரசுப் பள்ளிகளில் சோ்த்துக்கொள்ள வேண்டும் என்றனா்.