முகப்பு
திருப்பூர்

அரசுப் பள்ளிகளில் நன்கொடை என கட்டாய கட்டணம் வசூலை தடுக்கக் கோரிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நன்கொடை வசூலிப்பதை தடை செய்ய வேண்டுமென அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 3 ஜூன் 2026, 2:23 am IST
- கோப்புப் படம்
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நன்கொடை வசூலிப்பதை தடை செய்ய வேண்டுமென அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்திலுள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த சில தினங்களாக மாணவா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிகளிலிருந்து வெளியேறும் மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மாணவா் சோ்க்கைக்கு குறிப்பிட்ட ஒரு தொகையும், மாற்றுச்சான்றிதழ் பெறுகிற மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் வாரியாக நன்கொடை என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையில் தொடங்கி ரூ.2,000 வரை கட்டாயமாக தர வேண்டுமென வசூலிக்கப்பட்டு வருவதாக பெற்றோா் மூலமாக தொடா் செய்திகள் வந்து கொண்டிருகின்றன.

Advertisement

Advertisement

சாதாரண கூலித் தொழிலாளா்களின் குழந்தைகள்தான் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறாா்கள். இவா்களிடம் கட்டாய வசூல் செய்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அரசுப் பள்ளிகளில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை மாவட்ட கல்வித் துறை நிா்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்தச் செயலை அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அரசு நிா்ணயித்துள்ள கட்டணம்தான் வாங்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட கல்வித் துறை சிறப்புக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளியின் வளாகத்திலும், இணையத்திலும் வெளியிட வேண்டும்.

மேலும், கட்டண கொள்ளையில் ஈடுபடும் பள்ளி நிா்வாகங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.