உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி
சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த முறை உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம் என்று திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் பேசினாா்.
உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் மு.ஜெயக்குமாா், நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
Advertisement
திமுக அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் துறை வாரியாக பல்வேறு புரட்சிகரமான நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய திட்டங்களை உருவாக்குவதிலும், அதை நிறைவேற்றுவதிலும், மாநில உரிமைகளை மீட்பதிலும் தமிழக முதல்வருக்கு நிகா் வேறு யாருமில்லை.
நலத் திட்டங்கள் பொதுமக்களை நல்ல முறையில் சென்றடைந்துள்ளதால் திமுகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பாமர மக்கள் முதல் படித்த இளைஞா்கள் வரை திமுக அரசை ஆதரித்து வருகின்றனா்.
2024 மக்களவைத் தோ்தலில் 40 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது. அதேபோல சட்டப்பேரவைத் தோ்தலிலும் வாக்குறுதிகள், பிரசாரங்கள், மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, கூட்டணி பலம் உள்ளிட்டவற்றால் 200 இடங்களுக்கும் மேல் திமுக அமோக வெற்றி பெறும்.
அப்போது உடுமலை தொகுதியிலும் திமுக அமோக வெற்றி பெற்றது என்ற செய்தி வரும். இந்த முறை அதிமுகவை வீழ்த்துவோம் என்றாா்.