வளா்ச்சிப் பணிகளுக்காக உடுமலைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மு.ஜெயக்குமாா் பிரசாரம்
அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசில் உடுமலை தொகுதிக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன என்று வேட்பாளா் மு.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசில் உடுமலை தொகுதிக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன என்று வேட்பாளா் மு.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
உடுமலை தொகுதி திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா், சூளேஸ்வரன்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்
அப்போது அவா் பேசியதாவது: சாலை வசதிகளை மேம்படுத்த உடுமலை தொகுதி முழுவதும் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தில் காண்டூா் கால்வாய் பராமரிப்புப் பணிகள் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞா் கனவு இல்லங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
Advertisement
மேலும் ரூ.13 கோடியில் பிஏபி கால்வாய்கள் பராமரிப்புப் பணி நடைபெற்று முடிந்துள்ளது. உடுமலை ஐடிஐ தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ரூ. 35 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.3 கோடியில் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு அவசர சிகிச்சை மேற்கொள்ள ரூ.3 கோடியில் ஒரு கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளன என்றாா்.